Breaking

Monday, December 19, 2016

சினத்தை அடக்கினால் சிகரமாய் உயர்வாய்

அத்தனை செயலுக்கும்
முட்டுக்கட்டை
அறிந்தே பிறந்திடும்
சினமடா
அடியோடு அதனை
நீக்கிடவே
அருந்தவம் புரிந்திட
வேண்டுமடா


சினமது நெஞ்சினில்
இருந்திட்டால்
சிதைந்து போகும்
வாழ்க்கையடா
சிறுக சிறுக மனதிற்குள்
சிரமமின்றி துயரம்
நுழையுமடா



மலர்போல் மலர்ந்த
முகமுமே
மரித்தவர் முகம்போல்
தெரியுமடா
மனதினில் வெறுப்பு
முட்புதராய்
மண்டி உன்னை
அழிக்குமடா

ஒருகணம் யோசித்துப்
பார்த்திட்டால்
ஓட்டம் எடுக்கும்
சினமடா
ஓசை இன்றி அன்புமே
ஓடி வந்து
ஒட்டிக்கொள்ளுமடா.



ஆணவத்தை அகத்தினில்
அடக்கிவிட்டால்
ஆதவன் போல் முகம்
ஒளிருமடா
ஆக்கம் தேடியே வந்து சேர்ந்து
ஆகாயம் போல்
மனம் விரியுமடா.

மனசை மலராய்
மாற்றியே
மணம்வீசி புகழைப்
பரப்படா
மறந்தும் சினத்திற்கு
இடம்தராது
மனதினில் நிம்மதி
பெற்றிடடா



சினத்தை மனதினில்
அடக்கிவிட்டால்
சிகரமாய் வாழ்வு
உயருமடா
சிந்தித்துப் பார்த்து
நடையிட்டே
சிரமேற்கொண்டு நீ
செயல்படடா.

அறிவுக்கு அங்குசம்
போட்டிடடா
அடக்கத்தோடு என்றும்
இருந்திடடா
அயராது முயற்சிகள்
செய்திடடா
அடுத்தவருக்கு உதவி
வாழ்ந்திடடா.



சினமும் தன் சுவடை
இழக்குமடா
சிந்தையில் மகிழ்ச்சி
பிறக்குமடா
சிகரம் தொட்டிட
எழுந்திடடா
சிரஞ்சீவியாய் உலகில் 
வாழ்ந்திடடா.


♥{ இ.இலாசர் - வேளாங்கண்ணி }♥

Post Top Ad

Your Ad Spot

Pages