Breaking

Wednesday, May 27, 2015

உயிரின் கசிவுகள்

மகனே! பசியின்
மயக்கத்தினால்
உறங்கி விட்டாயா?
இல்லை நீயும்
பட்டினியால்
இறந்து விட்டாயா?




'பால் தராத
பாவி' யென்று
நினைத்து விடாதே,
படைத்தவனே!
பாலன் உயிர்
அணைத்து விடாதே !




எந்தன் மண்ணில்
காண்ப தெல்லாம்
அலையும் பிணங்களே!
பந்த மெல்லாம்
பசியால், நோயால்
வெந்த மனங்களே!





உணவு யெங்கள்
ஊரில் விளையும்
மருந்து போன்றது !
உடையை முழுதாய்
உடலும் உடுக்க
மறந்து போனது !




உந்த னுடல்
உயிர் பெறவே
உணவு தேடினேன் !
பாதம் நோகப்
பாலை மண்ணில்
நீரை நாடினேன் !




வளர்ச்சி கண்ட
நாடு மெங்கள்
வறுமை மறந்தது !
உயர்வு நிலைக்கக்
கடலின் மீதே
உணவை யெறிந்தது!



இரக்க முங்கள்
நெஞ்சில் வந்தால்
இரையைப் போடுங்கள்!
பறக்கு மெங்கள்
உயிரில் கொஞ்சம்
பார்வைப் போடுங்கள்!



*# கலைநிலா சாதிகீன் #*


www.ariwahem.blogspot.com




Post Top Ad

Your Ad Spot

Pages