Breaking

Saturday, October 17, 2015

அழுகிய தக்காளி

ஒரு நாள் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்.

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' -என்று மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு,

ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கிக் கொண்டே சென்றார்கள் .
மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். 

ஒவ்வொருவரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டு வரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தங்கள் பையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் .

இந்த தக்காளிப் பை எப்போதும் உங்களுடனே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்க வேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் மாணவர்கள் தலையை ஆட்டினார்கள் .

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்,ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். 


புன்னகைத்தபடியே ஆசிரியர் , ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை பழியை மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! 

அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது. 
நமக்கு எப்போது தெளிவு பிறக்கப்போகிறது ???

♥{ பஸால் }♥



www.ariwahem.blogspot.com

Post Top Ad

Your Ad Spot

Pages